செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

அரசியல் யாப்பு மறுசீரமைப்பும், முஸ்லிம்களை கொத்தடிமைக்குள் தள்ளி விடும் முஸ்லிம் கட்சிகளும்

- ஜுனைட் நளீமி -

அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பில் இன்று மக்கள் தளத்திலே கருத்தாடல்கள் சூடுபிடித்துள்ள நிலையில், முஸ்லிம்களது நிலைப்பாடு குறித்த கேள்விகள் தொடர்கின்றன. இந்த வகையில், முஸ்லிம்களது நிலைப்பாடுகள் குறித்த ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்கள் குறித்த பின்னணியில் முழுமையான ஒரு நகலும் தொகுக்கப்படாத நிலையில், சந்தர்ப்பவாத அரசியலுக்குள் முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது. உண்மையில்
முஸ்லிம்களது பிரதிநிதிகள் என்ற கட்சிகள் தமக்கான நிலைப்பாடினை எப்போதும் தெளிவாகக் கொண்டிருந்ததற்கான சான்றுகளை வரலாறு நெடுகிலும் காண முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற தற்போதைய முக்கியமான தருணத்தில் முஸ்லிம் கட்சிகள் மௌனம் சாதிப்பது பல்வேறு சந்தேகங்களையும் சமூக மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. டொலர்களும், யூரோக்களும் இலங்கை முஸ்லிம்களது தலை விதியை நிர்ணயம் செய்து விட்டதோ என்ற அச்சப்பாடும் முஸ்லிம் புத்திஜீவிகள் மட்டத்தில் ஏற்படத்தொடங்கியுள்ளது. ஆற்றாமையின் வெளிப்பாடாக இனியும் இந்தக்கட்சிகளை நம்பிப்பிரயோசனமில்லை என்ற வைராக்கியத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் குறித்த விடயம் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளன. அரசியல் யாப்புத்திருத்தம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் ஒரு நிலைப்பாட்டிலும் தமது கட்சிகள் மற்றொரு நிலைப்பாட்டிலும் இருப்பது எதிர்கால தமது கட்சி அரசியலுக்கு ஆப்பாக அமைந்து விடும் என்ற கணிப்பீட்டில் மெல்ல மெல்ல சமூகத்தை நாடி பிடிக்கும் முயற்சியில் முஸ்லிம் கட்சிகள் இறங்கியுள்ளன. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிக்கமைய முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளரினால் மக்கள் கருத்துக்காக கசிய விடப்பட்டுள்ளது. இணைந்த வடகிழக்குக்குள் தனியான முஸ்லிம் அழகு என்ற கோஷத்தை முஸ்லிம் தளத்திலே விட்டு நாடி பிடிக்க முயற்சிக்கின்றனர்
கிழக்கு கிழக்காகவே இருக்கட்டும்
 கிழக்கு மாகாணம் தனியான மாகாணமாகவே இருக்க வேண்டுமென்பது கிழக்கின் பெரும்பான்மை முஸ்லிம்களது நிலைப்பாடாகும். இன்று 2016.02.22ம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்ற மாகாண மட்ட முஸ்லிம் சிவில் சமூகப்பிரதிநிதிகளினால் கிழக்கு மாகாணம் தனியாகவே அமைய வேண்டுமென்ற தீர்மானம் எட்டப்பட்டமையை இங்கு குறிப்பிட முடியும். வரலாற்று ரீதியில் கிழக்கு மாகாணம் என்றும் வடக்கோடு இணைந்திருக்கவில்லை. மாறாக, கிழக்கின் தமிழ், முஸ்லிம் சமூகம் வடக்கு தமிழர்களுக்கெதிராகவே செயற்பட்டிருந்தனர் என்பதனை முக்குவர், திமிலர் போன்றோரின் போராட்ட வரலாறு குறிப்பிடுவதை வீ.சீ.கந்தையா உற்பட தமிழ் வரலாற்றாசிரியர்களின் நூற்கலிலிருந்து காண முடியும். கிழக்கு மக்கள் ஒன்றில் கோட்டை இராசதானியுடனோ அல்லது கண்டிய அரசுடனோ ஒன்றித்ததாக அல்லது வரி செலுத்தும் சிற்றரசாக காணப்பட்டுள்ளது என்பது வரலாறு. எனவே, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல. சிங்கள சகோதர இனத்தவர்கள் கூட வடகிழக்கு இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. சுயநலத்திற்காக இணைந்த வடகிழக்கு என்று சொன்னாலும் கூட, கிழக்கில் மூன்றாம் சிறுபான்மையாக காணப்படும் 23 வீதத்துக்கும் கூடுதலான சிங்கள மக்கள் ஒரே இரவில் சுமார் 10 வீதமாக மாக மாற்றம் பெறுவதும் சுமார் 40 வீதமாக வாழும் முஸ்லிம்கள் இணைப்பினால் 17 வீதமாக மாற்றம் பெறுவதும் ஜனநாயக மொழியில் இன அடக்குமுறையாகக் கொள்ளப்படும். எனவே, தற்போதுள்ள தனித்த மாகாண அலகில் தமிழரோ அல்லது முஸ்லிமோ அல்லது சிங்களவரோ முதலமைச்சராக வருவதற்கான வாய்ப்புக்கள் யதார்த்தமானது. ஒரு இனம் இன்னொரு இனத்திலே தங்கி சமரச அரசியல் செய்வதற்கான சந்தர்ப்பம் இங்கு நிலவுகின்றது. நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு வெளித்தள அரசியல் நிரலுக்குள் சிக்குண்ட சந்தர்ப்பவாத முஸ்லிம் கட்சிகள் இணைந்த வடகிழக்கினை முஸ்லிம் சமூகத்தில் திணிப்பதற்காக முஸ்லிம் அழகு என்ற பொய் மானைக்காட்டி சோறூற்ற நினைக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையோ அல்லது தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ சுயநிர்ணயமும், தன்னாதிக்கமும், ஆள்புல எல்லையையும் கொண்ட தனியான முஸ்லிம் தேசியத்தை ஏற்றுக்கொள்ளாமல், தமது அரசியல் முன் மொழிவுகளை வைத்துள்ள நிலையில், தனியலகு என்ற ஆசுவாசப்படுத்தளுக்கான பசப்பு வார்த்தைகள் பாண்டிச்சேரி என்ற இந்திய படத்தினை முஸ்லிம் திரையரங்குகளில் ஓட்ட நினைக்கின்றன. நிலத்தொடர்பற்ற பாண்டிச்சேரி முறைமையின் ஆழ அகலங்கள் ஆராயப்படாமல் மற்புதிரில் முஸ்லிம் சமூகத்தைத் தள்ளி விட முஸ்லிம் கட்சி முனைவது வரலாற்றுத்துரோகமாக அமைந்து விடும். பாண்டிச்சேரி என்பது இந்திய தேசத்தில் நிலத்தொடர்பற்ற ஒன்றியம். இதற்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படவில்லை. மத்திய அரசே இதனைக்கடுப்படுத்தும் அதிகாரத்தினை வைத்துள்ளது. மத்தியரசு 70 வீத நிதியை வழங்குமெனக குறிப்பிடப்பட்டிருந்தாலும், தற்போது 28 வீதமான நிதியே கிடைக்கப் பெறுகின்றது. மாநில நிரலில் இருந்திருந்தால் மாநில நிதியொதுக்கீட்டினைப் பெற்றிருக்கலாம். இதனால் பாண்டிச்சேரி நிர்வாக அலகில் அரச ஊழியர்களுக்கே மாதாந்த ஊதியத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாமை பற்றி முஸ்லிம் கட்சிகள் எதுவும் வாய் திறக்கவில்லை. கல்வி சுகாதாரம் மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பில் பாண்டிச்சேரி முஸ்லிம்கள் இழந்துள்ள இழப்புக்கள் பட்டியல் இடமுடியும். காவேரி நீரினை பக்கத்து மாநிலம் மூடிவிடுகின்ற போது சுமார் 32க்கும் அதிகமான விவசாயக்கிராமங்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்குவது திட்டமிடப்படாத நிலத்தொடர்பு அலகினால் ஆகும் என்பதனை எவரும் வெளியில் சொல்வதில்லை. இணைந்த வடகிழக்கில் அனைத்து காடு, நீர் நிலைகள், நில வளங்களும் தமிழர் பெரும்பான்மைப்பகுதியில் அமைந்துள்ள நிலையில், எவ்வாறு தங்கி வாழும் அலகினை முஸ்லிம்கள் ஏற்படுத்திக்கொள்வது. மாவில்லாற்றினைத் திறக்க மறுத்த தமிழர் போராட்டம் எவ்வாறானது என்பதெல்லாம் ஆராயப்பட வேண்டிய முன்னுதாரணங்களாகும். பாண்டிச்சேரி ஒன்றியத்தில் நிதி, கொள்கை வகுப்பு, சட்டம் இயற்றும் அதிகாரம் என்பன மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ளது. எனவே, ஒன்றில் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் அலகு தமிழ் தரப்பிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்துவதா? அல்லது மத்திய அரசிடம் மண்டியிடுவதா? என்ற தேர்வினைத் தீர்மானிக்க வேண்டி வரும். இவ்வாறு சாத்தியப்பாடற்ற நிலத்தொடர்பற்ற அலகினில் வாழ முடியாதென்ற ரீதியில் வடமாகான முஸ்லிம்கள் கிழக்கினை வடக்குடன் இணையக்க கூடாதென்ற கருத்தினைக் கொண்டுள்ளனர். இணைந்த வடகிழக்கில் ஒரு முஸ்லிம் அலகென்றால் வடமாகாண முஸ்லிம்களுக்கான தனியான ஒரு நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு தேவை என்ற கோஷத்தை முன்வைக்கின்றனர். இத்தகைய முரன்பாட்டரசியலுக்குள் தெளிவின்றி சமூகத்தைக் கண்மூடித்தனமாக தள்ளி விட முனைவதும் வடகிழக்குக்கு வெளியில் வாழும் மூன்றில் இரண்டு முஸ்லிம்களுக்கு எவ்வித தீர்வொன்றினைக் குறிப்பிடாது நலுவிச்செல்வதும் அரசியல் வங்குரோத்துத் தன்மையினை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. அரசியல் யாப்புத்திருத்தம் குறித்த உத்தேச தேர்தல் சட்ட நகல் தினேஷ் குனவர்த்தவினால் 2007 ஜூன் மாதம் பாராளுமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் போது, முத்து சிவலிங்கத்துடன் சேர்த்து முஸ்லிம் காங்கிரஸும் தமது முன்மொழிவுகளை எழுத்து மூலம் வழங்கியது. அத்தோடு, 2015 மார்ச் 10ம் திகதி அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் முன் மொழிவுகளைச் சமர்ப்பித்த பின்னரும், தமிழர் தேசிய கூட்டணியுடன் புரிந்துணர்வுப் பேச்சுக்கள் திருப்திகரமாக அமைந்ததென ஊடக அறிக்கைகள் விட்டதும் போக எல்லாம் என்னென்ன விடயங்கள் என்பதனை மக்கள் மன்றிற்கு சமர்ப்பிக்க இத்தகைய முஸ்லிம் கட்சிகள் முன்வரவில்லை என்பது கவலைக்குரியதும் சந்தேகத்தினைத் தோற்றுவிப்பதுமாக அமைந்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே ஒரு முன் மொழிவை தயாரித்து தமிழ் சமூகத்திற்கு வெளிப்படையாக சென்றடையச்செய்த போதும், முஸ்லிம் சமூகத்தின் பெயரால் அரசியல் இலாபங்களை அனுபவிக்கும் இம்முஸ்லிம் கட்சிகள் எதுவித நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது கவலையளிக்கின்றது. அரசியல் தலைமைகளுக்குப் பின்னால் சமூகம் சென்ற காலம் மலையேறி விட்டதாகக் கருத வேண்டியுள்ளது. சமூகத்தின் பின்னால் அரசியல் தலைமைகள் தொங்கிக் கொள்ள வேண்டிய நிலையில், மக்கள் விழிப்புணர்வு சிறிதளவு காணப்படுகின்றததென்பதனை கடந்தகால ஜனாதிபதி தேர்தலில் இருந்து அரசியல் தலைமைகள் பாடம் கொள்ள வேண்டியது காலத்தேவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக