மானிட உலகம்
செவ்வாய், 26 டிசம்பர், 2023
இளமையில் வறுமையும் உழைப்பில் இறையச்சமும் பேணுதலும்!
ஸஊதி அரேபியாவுக்கு நிதியுதவி வழங்கிய இலங்கை முஸ்லிம்கள்.
வெள்ளி, 1 டிசம்பர், 2023
காகித்திலிருந்து ஒன்லை அரட்டைக்கு மாறிய மனிதம்.
அன்று ஒரு காலம் தூரத்து நண்பனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினால் அந்த கடிதம் நன்பனுக்கு போய் சேர்ந்துவிட்டதா ? இல்லையா ? என்பதுகூட தெரியாது, நண்பனின் பதில் கடிதம் வரும் வரை தபாற்காரனை பார்த்துக்கொண்டிருந்த காலம்.
இன்று ஏதோ ஒரு சமூக ஊடகத்தில் நன்பனை ஒன்லைன்னில் பார்த்தாலே போதும்
Hi Da Machan என்று ( தங்ளிஸில் )தொடரும் அரட்டை, நாம் அனுப்பிய செய்தியை நண்பர் பார்த்துவிட்டார் என்பதைக்கூட உறுதி செய்ய முடியும். அடுத்த செய்தி எதிர்பார்த்து காத்திருக்கும் எமக்குத்தான் டைப் செய்துகொண்டிருக்கின்றார் என்பதையும் உறுதி செய்ய முடியும்.
தொழிநுட்பத்தின் காலடியில் கீழ் கிடக்கும் மனிதம்.
- சலீம் பைரூஸ்
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023
நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் இரண்டும் சிறந்த உம்மத்தின் சமாந்தரமான பண்புகளாகும்!
சத்தியம், அறம், தர்மம், உண்மை, நீதி, நீதி, நேர்மை, அன்பு, கருணை, அறிவு, ஒழுக்கம், பண்பாடு, சமாதானம், சமத்துவம், சகவாழ்வு, நல்லாட்சி, மனிதாபிமானம் என நல்ல வாழ்வியல் ஓங்க உழைப்பது, ஏவுதல், பிரச்சாரம் செய்தல் சிறந்த உம்மத்தின் அடிப்படைப் பண்பாகும்.
அதே போன்று அவற்றிற்கு நேர்மாறான அசத்தியம், பொய், அநீதி, அக்கிரமம், அராஜகம், களவு, ஊழல், மோசடி, அறியாமை, அடாவடித்தனம், சமூக, பொருளாதார, கலை, கலாசார, ஒழுக்க, பண்பாட்டு, சுகாதார, சுற்றுச் சூழல் சீர்கேடுகள், மது, போதை வஸ்துகள், இனமத வெறி, வன்முறை, தீவிரவாதம் போன்ற தீயவற்றை தடுப்பதும், அவற்றிற்காக எழுந்து நிற்பதும், குரல் கொடுப்பதும் மனிதர்களுக்காக அனுப்பப்பட்ட சிறந்த உம்மத்தின் பண்பு ஆகும்.
எமது வணக்க வழிபாடுகளும் ஆன்மீக பண்பாட்டு அடித்தளங்களும் அத்தகைய அறநெறிகளின் பால் தான் எம்மை இட்டுச் செல்கின்றன, தனிப்பட்ட குடும்ப ஆன்மீக வாழ்வு ஒன்றாகவும் பொது வாழ்வு, சமூக தேசிய வாழ்வு வேறொன்றாகவும் இருக்க முடியாது.
ஆக, மன்னர் ருஸ்துமிற்கு முன்னால் ரிப்ஈ பின் ஆமிர் என்ற நபித் தோழர் நிறுத்தப்பட்ட பொழுது நீங்கள் இங்கு படையெடுப்பதன் நோக்கம் என்ன என்று கேட்கப்பட்ட பொழுது "மனிதர்களின் அடக்குமுறைகள், அடிமைத் தலைகளில் இருந்தும், அவர்கள் உருவாக்கிக் கொண்ட கொள்கை கோட்பாட்டு அநீதி அக்கிரமங்களில் இருந்தும் மக்களை விடுவித்து இஸ்லாம் சொல்லித் தரும் நீதி சமத்துவத்தின் பாலும், உலக வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து வளமான வாழ்வியல் பக்கமும் அவர்களை வழிநடத்துவது எமது பணி, இறைவனது மார்க்கத்தை நிலைபெறச் செய்வதே எமது பணி" என்று கூறினார்கள்.
உண்மையில் எல்லாம் வல்ல இறைவன் எல்லா மனிதர்களுக்கும் படைப்பினங்களுக்கும் வாழ்வதற்காக படைத்துள்ள இந்த பூமியில் எல்லை மீறி அடாத்தாக அராஜகம் புரிந்த அக்கிரமக்காரர்கள் சர்வாதிகாரிகளுக்கு எதிராகவே அனைத்து இறைதூதர்களும் போராடி இருக்கின்றார்கள்.
பிர்அவுன், காரூன், ஹாமான், நும்ரூத், அபூ ஜஹ்ல், உத்பா உமையா, ஆது, ஸமூது என சங்கிலித் தொடரான அசத்தியத்தின் அராஜகத்தின் காவலர்களது அடிமைத்தனத்தில் இருந்து மக்களை விடுவிப்பதே அவர்களது பிரதான பணியாக இருந்தது.
தீமையை கையால் தடுப்பது முடியாவிட்டால், சொல்லால் தடுப்பது கடமையாகிறது, எழுந்து நின்று போராடுவது குரல் கொடுப்பது இரண்டும் முடியாத விட்டால் மனதால் வெறுத்து அசத்தியத்தை விட்டும் அதன் காவலர்களை விட்டும் ஒதுங்கி நிற்பது மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த உம்மத்திற்கு சொல்லித் தரப்பட்ட மாநபி வழியாகும்!
தேசத்தின் நலன்கள், அமைதி, சமாதானம், சமத்துவம், சகவாழ்வு, அடிப்படை சமய கலாசார உரிமைகள், இருப்பு, பாதுகாப்பு, சயாதிபத்தியம், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார சபீட்சம், நல்லாட்சி என்ற அனைவருக்கும் பொதுவான இலக்குகளில் சரியான தரப்புக்களுடன் தோளோடு தோள் நின்று உழைப்பதுவும் அறவழி நடக்கும் சிறந்த உம்மத்தின் பண்பாகும்.
அங்கு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையில் சமரசம் கிடையாது, சொந்த இலாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள், நட்புகள், உறவு முறைகள், சொந்த பந்த பாசங்கள் என விட்டுக் கொடுப்புகள் இருக்க முடியாது, இரண்டும் கெட்டான் நயவஞ்சகத் தனங்கள் இருக்க முடியாது!
மக்கள் மன்றில் நீதி கோரப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சத்தியத்தின் சாட்சியாளர்களாக, உண்மை, நீதி, நேர்மை, அறம், தர்மத்தின் சாட்சியாளர்களாக மனச்சாட்சியின் படி சான்று பகர்வதே விசுவாசிகள் மீதான தார்மீகக் கடமையாகும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023
கடன் தீர்த்து... சிறு கதை
“இது....! ஊட்டுக்கு ப்ரிஜ் இல்லாமல் பெரிய கரச்சல்...”
“ஓ! நானும் வாங்கத்தான் நெனச்சிக் கொண்டிருக்கிற...”
“என்னத்துக்கு புதிசா வாங்கோணும்? ஒங்கட ஊட்டில இருக்கிறது நீங்க வாங்கினதாமே! அதக் கொண்டு வந்தாச் சரி!”
“அது ஊட்டுக்கு வாங்கினது... அத எப்பிடி நான் கேக்கிற...?”
“நல்ல கத. நீங்க வாங்கினதக் கேக்க என்னத்துக்கு யோசிக்கோணும்? இப்ப எங்களுக்கு வாங்க வசதியில்ல, நான் வாங்கினதக் கொண்டு போறேன் என்டு சொல்ல வேண்டியதுதானே!”
“..........”
“இது..! இப்பதான் எனக்குத் தெரியும். நீங்க சொல்லவும் இல்ல...”
“என்னத்த..?”
“மாமிட ரூம்ல இருக்கிற பெரிய அலுமாரி, அது நீங்க வாங்கினதாமே!”
“இல்ல... யாரு சொன்ன..?”
“எனக்கு மறைக்க வேணாம்! ஒங்கட மதினிதான் சொன்ன.."
“உம்மா வாப்பாக்கு மகன் எத வாங்கிக் குடுத்தாத்தான் என்ன! அது மறைக்க வேண்டிய விசயமா? நான் அலுமாரி வாங்கல்ல.. உம்மாக்கு நான் செலவுக்கு அனுப்பினதில மிச்சம் புடிச்சி உம்மா வாங்கி இரிக்கிறா"
“அப்ப அவ்வளவு சல்லி நீங்க அனுப்பிருக்கிற.. சரி.. சரி.. இப்ப புள்ளைகளிட உடுப்பு வைக்க அலுமாரி இல்ல என்டு சொல்லி அந்த அலுமாரியக் கொண்டு வாங்கோ!'
“ஹனீமா, நீங்க என்ன சொல்ற..?"
“ஒங்கட சல்லிக்கு வாங்கினத ஒங்கட ஊட்டுக்குக் கொண்டு வரச் சொல்ற.. இது குத்தமா?"
“.............”
“இது...! ஊட்டுல ஒங்கட தாத்தா பாவிக்கிற மெஷின்....அதுவும் நீங்க ஸவுதியில இருந்து கொண்டு வந்ததாமே! ஏன் இதொன்டையும் எனக்கிட்ட சொல்றல்ல..?”
“ஹனீமா! பென்சிலும் கொப்பியும் எடுத்திட்டு வாங்கோ! கலியாணம் முடிக்க முந்தி ஊட்டுக்குக் கொண்டுவந்த டொபி, சொக்லட்டில இருந்து எல்லாம் லிஸ்ட் போட்டுத் தாரன்.”
“சரி, சரி, அதுக்கு என்னத்துக்கு அவ்வளவு கோவம் எடுக்கிற? கிழிஞ்ச உடுப்பத் தச்சவும் வழியில்லாம நான் படுகிறபாடு! இன்டைக்கே அந்த மெஷின எடுத்துக் கொண்டு வாங்கோ! தாத்தாக்கு மெஷின் வேணுமென்டா மச்சான் வாங்கிக் குடுப்பார்தானே!”
“........................................."
“இது...! ஒங்கட ஊட்டுல பாவிக்கிற அந்தப் பெரிய க்ரைன்டர் ஸெட்... அது எங்கட வெடிங்குக் கெடச்சதாம். ஓங்கட மாமி அது அவட கிப்ட் என்டு சொன்ன.. பாருங்கோ, சொல்லாமப் பேசாம வச்சிக் கொண்டு பாவிக்கிற மாதிரி! சீ... எங்கட உம்மவென்டா ஒரு நாளும் இப்பிடி நாய் வேல செய்யிறல்ல...”
“ஹனீமா...!”
“என்னத்துக்கு இப்பிடிக் கத்துற..?”
“பேசுறத அளந்து பேசுங்கோ! உம்மா எங்கட சாமான் ஒன்டையும் களவான்ட இல்ல. ரெண்டு மூனு க்ரைன்டர் கெடச்சதால, மாமி தந்தத வச்சிக் கொள்ளச் சொல்லி நான்தான் உம்மாக்குச் சொன்ன......”
“நல்லா இரிக்கி. கெடச்சதுல நல்ல ஸெட் அதுதான். அதத் தூக்கிக் குடுத்துட்டு வந்தீக்கிற... நாளைக்கே அதக் கேட்டெடுத்துக் கொண்டு வாங்கோ!"
“...........................”
“இது....! ஒங்கட ஊட்டுல புதுசா கட்டின பகுதியெல்லாத்துக்கும் நீங்களாமே செலவழிச்சது..... யாரப்பே! நாங்க சொந்த ஊடில்லாம கூலி ஊட்டுல இரிக்கிற நீங்க கட்டின ஊட்ட வச்சிட்டா? இப்பவே போங்கோ! ஊட்டுல அரவாசிய ஒங்கட பேருக்கு எழுதித் தரச் சொல்லுங்கோ!”
“இது..! நான் எத்தின நாளா எத்தின விஷயம் சொல்லி வார... நீங்க ஒன்டையாவது செய்யிற மாதிரி வெளங்கவே இல்ல....... நீங்க செய்யப் போறா? இல்லையா?”
“செய்யிற ஹனீமா ஒன்டையும் உடாம எல்லாத்தையும் செய்யிறன்........’
“சா....... ஏன்ட தங்கம்”
“அதுக்கு முந்தி சில வேலைகள் செய்ய வேணும்...”
“என்னத்த...?”
“ஏன்ட உம்மா என்ன வயித்தல சொமந்து கொண்டு கஷ்டப்பட்டாவே அதுக்கான கூலியக் குடுக்கவே ஏன்ட ஆயுள் போதாது. அதையும் குடுத்திட்டு, உம்மா தந்த பாலுக்கான கூலி, வாப்பா படிபிச்சி ஆளாக்க செலவு செஞ்ச காசு, பட்ட கஷ்டத்துக்கான கூலி, ஏன்ட மேல அவங்க ரெண்டு பேரும் காட்டின அளவில்லாத அன்பு, அக்கற எல்லாத்துக்குமான கூலி எல்லாத்தையும் குடுத்திட்டு, நீங்க சொன்னதுகள எடுத்திட்டு வாரன்!”
-ஷாறா-
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023
அல்குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்தல்
ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி (றஹ்)
தமிழில்: ஏ.டபிள்யூ.எம். பாஸிர்
அல்குர்ஆனை பிரக்ஞையின்றி ஓதுதல் முஸ்லிம்களை பீடித்திருக்கின்ற ஒரு நாட்பட்ட நோயாகும். இதனால் இறைவஹியுடனான அவர்களி தொடர்பு மலடாகிப் போயுள்ளது. அல்குர்ஆனின் வசனங்களை ஓதல், கேட்டலுடன் அவர்கள் போதுமாக்கிக் கொண்டுள்ளனர். இவற்றினால் அவர்களது சிந்தனையில் நேர்வழியின் ஒளிக்கீற்றுக்கள் இலேசாக தென்படலாம். ஆனால் அதன் முழு ஒளி உள்ளத்தில் படர முன்னரே அது மிக விரைவாக மறைந்து போய்விடும்.
சிந்தனை, ஆராய்ச்சி நீக்கம் செய்யப்பட்ட மறைவான இரகசியமொன்று குர்ஆனின் எழுத்துக்களை ஓதுவதில் மறைந்திருப்பதாக பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
மரணித்தவர்களுக்காக அல்லது மரணத்தறுவாயில் உள்ளவர்களுக்காக பரவலாக ஓதப்படும் சூறாவின் வசனம் எனது கவனத்தை ஈர்த்தது.
' அது நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. இது உயிரோடிப்பவர்களை எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்குரிய தண்டனையை உறுதிப்படுத்துகிறது.' (யாஸீன்: 69:70)
அதேபோல, தன்னைச் சார்ந்திருப்பதை கௌரவமாகக் கருதும் அடியார்களை, அவர்களின் பல உயர் குணங்களை குறிப்பிட்டு விட்டு அல்லாஹ் இவ்வாறு வர்ணிக்கிறான்.
' தங்களது இரட்சகனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் செவிடர்களையும் குருடர்களையும் போல அதன் மீது விழமாட்டார்கள்.' (அல்-புர்கான் : 73)
விளக்கமின்றிய கேட்டலும் சிந்திப்பின்றிய பார்வையும் மனித ஆற்றல்களை அழித்துவிடும் நோய்களாகும். அது மனிதனை உயிரற்ற ஜடமாக்கி விடுகிறது. ஜடங்களால் மனித உலகத்தில் எந்தவொன்றையும் செய்ய முடியாது.
பல குர்ஆன் வசனங்களில் வரும் 'திலாவத்' என்ற சொல்லை ஆழ்ந்து நோக்கினால் இறுதித் தூதை எடுத்துச் சொல்லுதல், அதன் பொது மைல்கற்களை தெளிவுபடுத்துதல், விவகாரங்கள், இலக்குகளுக்கான சுருக்கமான காட்சியை வழங்குதல் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதனை எமது காலத்தில் செயல்பாட்டுக் கையேடு (Operation Manual) எனச் சொல்லலாம். கற்றல்இ ஆராய்தல்இ கற்பித்தல் என்பவையெல்லாம் அதற்குப் பிறகுதான். அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
' நபியே நாம் உம்மை இவ்வாறே ஒரு சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம். இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாக சென்றிருக்கிறார்கள். நாம் உம்மீது எதை வஹியாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஒதிக்காண்பிப்பதற்காக உம்மை அனுப்பினோம். (அர்-ரஅது: 30)
'இந்த ஊரை கண்ணியப்படுத்தியுள்ள இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எல்லா விடயங்களும் அவனுக்கே உரியன. அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்படியும் நாhன் ஏவப்பட்டுள்ளேன். இன்னும் குர்ஆனை ஓதவும் நான் ஏவப்பட்டுள்ளேன்.' (அந்-நம்லு: 91)
திலாவத் என்பது அல்லாஹ் தனது வேதத்தில் வழங்கியுள்ள சத்தியத்தையும் ஒளியையும் வாசிப்பதற்கான திறப்பு என்பதை அதிகமான அல்-குர்ஆன் வசனங்கள் சொல்கின்றன. அப்படியிருக்க எப்படி அது உணர்வின்றிப்பாடும் துதிப்பாடல்களாக மாறிப்போனது?!
குர்ஆனின் சொற்கள் புனிதத் தன்மையைக் கொண்டிருப்பது உண்மையே. அல்லாஹூ தஆலா முதல் ஸுஹூபுகளுக்கு நிகழ்ந்தவைக்கு மாற்றமாக அல்-குர்ஆனை பாதுகாப்பானதாக்க விரும்பியதுதான் அதற்குக் காரணம்.
கருத்துக்களை அறிவிப்பதனூடாக, அதன் மொழிபெயர்ப்புக்களை நகர்த்துவதனூடாக அல்குர்ஆனின் சொற்களை குறைத்து மதிப்பிடுவதானது அல்குர்ஆனின் உண்மையை அமைப்பு ரீதியாகவும் கருப்பொருள் ரீதியாகவும் இல்லாமலாக்கிவிடுகிறது. இதனால்தான் குர்ஆனின் சொற்களின் மீது கடுமையான கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அதனை திரும்ப திரும்ப ஒதுவதை கூலிதரும் வணக்கமாகவும் ஆக்கப்பட்டது.
சொகுசான பெட்டியொன்றில் விலையுயர்ந்த மாணிக்கக்கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பெட்டி விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்தப்படுகிறது. அதனுள்ளேயிருக்கும் ஒரு மாணிக்கம் திருட்டுப்போய்விடும் போது அந்தப் பெட்டிக்கு என்ன பெறுமதி கிடைக்கப்போகிறது!
எழுத்துக்களை அழகாக உச்சரிக்கத் தெரிந்து கொண்டு அதன் கருத்துக்களை மறந்தோமானால் அந்த அல்குர்ஆனினால் என்ன பயனை அடையப்போகிறோம்?
நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கையில் ஷைத்தான் எமது அறிவை திருடிவிட்டானா என யோசிக்க வேண்டியிருக்கிறது?
'மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டதா? (முஹம்மத்: 24)
'குர்ஆன் பற்றிய சில பார்வைகள்' என்ற நூலின் முன்னுரையிலிருந்து (01)
ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023
விளையாட்டுப் போட்டிகளில் ஆடைகள் அவ்ரத் மறைத்திருப்பதனை உறுதி செய்து கொள்வோம்.
சனி, 8 ஏப்ரல், 2023
ரமழான் சிந்தனை 01
ரமழான் சிந்தனை 01
The right Leadership
- Dr Rauf Zain -
நல்ல தலைமைத்துவம் இல்லாமல் ஒரு சமூகம் உயிர்ப்புடன் நிலைப்பதற்கான வாய்ப்பில்லை. மனித வளங்களை திட்டுமிட்டு உருவாக்கும்போதே நல்ல தலைமை உருவாக்கப்படுவது சாத்தியமாகும். மனித தலைகளை ( human heads) மனித வளங்களாக (human resources) மாற்றும் மூலோபாயத்திட்டத்தில் சமூக நிறுவனங்கள் கவனம் குவிப்பது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும். தலைவன் இல்லாத சமூகம் மேய்ப்பாளன் இல்லாத மந்தைக்கூட்டம் போன்றது என்ற நபிகளாரின் வாக்கை இன்று நிதர்சனமாகப் பார்க்கிறோம். 2000 மில்லியன் உலக முஸ்லிம்களுக்கு ஒரு தலைமைத்துவம் இல்லை. அதன் விகாரமான விளைவுகளை உலகெங்கும் காண்கிறோம். இது குறித்து நாம் இந்த றமழானில் இருந்தாவது சிந்திப்போமாக!
செவ்வாய், 27 செப்டம்பர், 2022
ஒர் உலக ஜாம்பவானின் மரணம்
அல்லாமா முஜத்தித் முஜ்தஹித் முபஸ்ஸிர்.முஹத்திஸ் இமாம் கர்ழாவி (றஹ்) வாழ்வும் பங்களிப்பும்
அவரது சிந்தனைகள் கருத்துக்களை முன்வைத்து சில குறிப்புகள் -01
இமாம் யூஸுப் அல் கர்ழாவி அவர்கள் இந்நூற்றாண்டில் வாழ்ந்து மரணித்த முஜத்தித்களில் ஒருவர். இஸ்லாமிய தஃவா களத்தில் சுமார் ஏழு தசாப்த அனுபவங்கள் கொண்டவர். உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான அறிவு ஜீவிகளை உருவாக்கிய பேராசிரியர். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உலக ஆதர்ஷம். இஸ்லாமிய நிலைக்களனில் ஓர் உலக நாயகன். அரை நூற்றாண்டுக்கு மேல் தனது பேனை முனையில் போராட்டம் நடாத்திய எழுத்தாளர். கலை இலக்கியத்தில் பேரார்வம் கொண்ட புதுக் கவிஞர். அவரது ஒவ்வொரு நூலையும் வாசிக்க கையில் எடுக்கும் போது ஒரு புதையலுக்குள் புகும் புதிய அனுபவம்.
அறபு உலகைக் கடந்து உலக முஸ்லிம்களால் மதிக்கப்பட்ட மாணிக்கம் அவர். கர்ழாவி அவர்கள் இஸ்லாமிய உலகுக்கு வெளியே சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கும் பயணம் செய்தவர்.அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஷரீஆ அடிப்படையில் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தவர்.முஸ்லிம்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் இஸ்லாமிய தனித்துவத்துடன் வாழ வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் தனித்துவமானது. அதனால்தான் சிறுபான்மை வாழ்வியல் குறித்து அவரது பிரத்தியேகமான பிக்ஹுத்துறை ஆய்வுகள் விரிவடைந்தன. அது தொடர்பில் அவர் விரிவாக எழுதினார்.
இத்துறை சார் பிக்ஹு நூல்கள் அரிதிலும் அரிது. மஜ்லிஸுல் அவ்ரூபி லில் புஹூதி வல் பத்வா (ஆய்வுக்கும் பத்வாவுக்குமான அய்ரோப்பிய சபை) உருவாக்கத்திலும் வழி நடாத்தலிலும் அல்லாமா கர்ழாவி அவர்களது பங்கு மெச்சுதலுக்குரியது. அம்மன்றம் அய்ரோப்பிய நாடுகளில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடாத்தி வந்த ஆராய்ச்சி மாநாடுகளில் உத்வேகத்துடன் பங்குபற்றிய அல்லாமா அவர்கள் அம்மன்றத்தை வழிநடாத்துவதிலும் முன்னணிப் பங்கினை ஆற்றியுள்ளார். இஸ்லாமிய அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவராக இருந்து அன்னார் ஆற்றிய பங்களிப்பும் போற்றுதலுக்குரிய தாகும்.
இஸ்லாமிய சட்டம்,தஃவா, சமுகக்களம், இஸ்லாமிய கலைகள், வரலாறு,படைப்பிலக்கியம், ஆன்மீகம் என அனைத்துத் தளங்களிலும் மிகுந்த விளை திறனுடன் இயங்கிய இமாம் அவர்கள், இந்த ஒவ்வொரு பரிமாணத்திலும் எழுதியுள்ள நூல்கள் அவரது ஆழமான ஆய்வுகளின் பிரத்தியட்ஷமான புலப்பாடுகளாகவே உள்ளன. குர்ஆன்,சுன்னாஹ், முன்னைய இஸ்லாமிய அறிஞர்கள்,சட்டவியலாளர்கள், என ஆதாரங்களை அடுக்கும் அவரது எழுத்துப்பாங்கு அவருக்கேயுரிய தனித்தன்மையாகும். வரைவிலக்கணத்திலிருந்து தொடங்கி வரலாற்று வழியாக நகர்ந்து ஷரீஆவின் வரையறைகளை முன்னிறுத்தி தர்க்க ரீதியாக முடிவுறுத்தும் அந்த எழுத்து மிகுந்த சுவாரஸ்யம் கொண்டது. வாசிக்கும்போதுதான் அந்த இன்பத்தை அனுபவிக்கலாம். ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி (றஹ்) அவர்களது எழுத்துக்கும் கர்ழாவி அவர்களது எழுத்துக்கும் இடையிலான விலகல் புள்ளிகளில் இதுவும் ஒன்று.
வேதனையாய் வேதனையாய்
வெளியாகிறது!
இவ்வேதம்
கிழக்கிலும் மேற்கிலும்
ஒளிபாய்ச்சும் சூரியனாய்
வழிகாட்டுகிறது! ஆனால்
முஸ்லிம்களோ குருடர்கள் போல்
குமைந்து நிற்கிறார்கள்.
நபஹாத் வலபஹாத் என்ற அவரது தொகுதியில் உள்ள இந்தக்கவிதை அடிகள் முஸ்லிம்களுக்கும் குர்ஆனுக்குமிடையே இன்று நிலவும் பலவீனமான உறவைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த மார்க்கம் வாழ நான் சிரித்துக் கொண்டே மரணிப்பேன் என்ற தலைப்பில் அவர் சூடானில் நடந்த இலக்கியச் சந்திப்பில் பாடிய கவிதையும் மிக அற்புதமானது.
சமகால முஸ்லிம் உம்மாவின் வீழ்ச்சி நிலை கண்டு அவர் மனம் வெம்பினார்.
சமூக மாற்றம் மற்றும் சீர்திருத்தம் குறித்து மர்ஹூம் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள் கொண்டிருந்த அதே கண்ணோட்டத்தையே இமாம் அவர்களும் கொண்டிருந்தார். குற்றுயிராய் வீழ்ந்து கிடக்கும் இஸ்லாமிய சமூகத்தை தூக்கி நிலைநிறுத்தும் முதன்மை ஆயுதம் முஸ்லிம் சமூகம் குறித்த சுயவிமர்சனமே என்பதில் இமாம் அவர்கள் ஆழமாக நம்பிக்கை கொண்டிருநதார். அதன் பிரதிபலிப்பே கோளாறு எங்கே என்ற அவர்களது நூலாகும்.அந்நூலில் சமூகப்பின்னடைவுக்கான மூல காரணங்களை விமர்சனபூர்வமாக அவர் ஆராய்கிறார்.
அவரது வாழ்வும் வகிபங்கும் நம் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியான பாடமாகும். தனது இரண்டாவது வயதில் தந்தையையும் பதினான்காவது வயதில் தாயையும் இழந்த ஒருவர், இந்த இமயத்தை எப்படி எட்டினார்? என்பது ஆச்சரியமான கேள்விதான். கிராமப்புறமொன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அனாதையாக வளர்ந்து ,வறுமையோடு போராடிப் போராடி, பெரும் புயல் வீசும் தருணங்களில் அலைகள் மீது தாவித் தள்ளாடி வாழ்க்கைக் கடலில் கரை சேர்ந்த அவரது பயணம், எத்துணை மகத்தானது என்பதை எளிதில் ஊகிக்கலாம். விளையும் பயிரை முளையில் தெரியும் என்பதுபோல் அவரது கல்வி ஈடுபாடும் பேரார்வமும் அவரது எதிர்கால இமயத்தின் தீர்க்க தரிசனமாய் தெரிந்தது.
அவர் எதிர்நோக்கிய வறுமை அவரை அவரது கல்விப் பயணத்திலிருந்து
தடுத்து நிறுத்த அவர் அனுமதிக்கவில்லை. தனக்கு முன்னால் குவிந்த அத்தனை வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்தினார். அல் அஸ்ஹரின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் இணைந்து ஆரம்பக்கல்வியை த்தொடர்ந்தார். அடைவுகளில் எப்போதும் முன்னணி மாணவராக திகழ்ந்தார். உயர்தரப் பரீட்சையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அவர்கள், அல் அஸ்ஹர் உஸூலுத்தீன் பீடத்தில் இணைந்து 1953 இல் பட்டதாரியாக வெளியேறினார். அவரது வகுப்பில் அப்போது 180 மாணவர்கள் . அவர்தான் முதற்தர சித்தி (First Class)யைப் பெற்றார்.
1957 இல் மொழித்துறை மற்றும் இலக்கியத்திற்கான உயர்கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா பட்டம் பெற்றார். 1960 இல் உஸூலுத்தீன் பீடத்தில் குர்ஆன் ஹதீஸ் துறைகளில் முதுகலைக்குச் சமாந்திரமான உயர்கல்வித் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. 1973 இல் 'ஸகாத்தும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதன் பங்கும் ' எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக கலாநிதிப்பட்டம் பெற்றார்கள்.
கர்ழாவி இமாம் அவர்களது ஒவ்வொரு துறை சார் பங்களிப்பு குறித்தும் இந்தப்பத்தியில் எழுத எண்ணுகிறேன் இன்ஷா அல்லாஹ்!
தொடரும்
கலாநிதி றவூப் ஸெய்ன்
2022.09.27.
திங்கள், 22 ஆகஸ்ட், 2022
வெள்ளி, 14 டிசம்பர், 2018
துரோகத்தால் எழுதப்பட்ட வரலாறு
வெள்ளி, 30 நவம்பர், 2018
ஆட்சியும் அதிகாரமும் புகழும் மாட்சிமையும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு உரியன, அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்
அதிகாரமும் புகழும் மாட்சிமையும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு உரியன, அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான், தான் நாடியவர்களிடமிருந்து அதனைப் பறித்து எடுப்பான், என்று நாங்கள் விசுவாசம கொள்கிறோம்.
"(நபியே! பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: அல்லாஹ்வே (இம்மை மறுமையின் சகல) ஆட்சிக்கும் அதிபதி! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய்; மேலும் நீ நாடியவரை கண்ணியப்படுத்துகின்றாய்; இன்னும் நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய்; நன்மை(யாவும்) உன் கைவசமே (இருக்கின்றன). நிச்சயமாக, நீ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்". (ஸுரத் ஆல இம்ரான் 3:26)